Tuesday, April 28, 2009

கேக்குரவன் கேனயனாக இருந்தால்.............

www.tamilnathy.blogspot.com வலைப்பதிவில் இக்கட்டுரையினை எழுதியவர் தோழர் தமிழ்நதி

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள். பெவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் கைதட்டிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதறியாமல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சக்கட்ட நிகழ்ச்சி நேற்று அரங்கேறி முடிந்தது. ‘உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர்’கலைஞர் கருணாநிதி அவர்கள், இலங்கைத் தமிழருக்காக ‘உண்ணாவிரதம்’ இருந்ததுதான் கலையிரவிற்கே மகுடம் வைத்த நிகழ்ச்சி. ‘ஓட்டுக்காக உடம்பிலிருக்கும் கடைசித் துணிவரை கழற்றிப்போடுவதென்று சங்கற்பம் செய்துவிட்டார்களா என்ன!’ என்று வியக்கத் தோன்றுகிறது.ஈழத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் சிதறு தேங்காய்போல தலைசிதறிச் செத்தார்கள். கர்ப்பத்தினுள்ளிருந்த குழந்தைகூட காயப்பட்டது. பசியில் சிறிதுசிறிதாக மாண்டுமடிந்தவர்கள் எத்தனை பேர். எலும்பும் தசையும் குருதியுமாய் பிரிந்து கூழாகித் தரையோடு தரையாக வழிந்தோடிய உடல்கள் எத்தனை. ‘ஐயோ ஐயோ’வென்று உயிர்பதறி காடுகளில் அலைந்து பித்தாகிப் பிதற்றியழுதன எமது சொந்தங்கள். கட்டிடங்களின் இடிபாடுகளுள் கிடந்து ‘காப்பாற்றுங்கள்’என்று கத்தி கடைசிநம்பிக்கையும் வற்றி வான்பார்த்து உறைந்த கண்கள் எத்தனை.. சொல்லொணா, எழுதவொண்ணாக் கொடுமைகளை எங்கள் சகோதரர்கள் அனுபவித்தபோதெல்லாம், கண்ணப்பநாயனார் சிவபெருமானைக் கட்டிக்கொண்டிருந்ததைப் போல இரவும்பகலும் நாற்காலியைக் இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்! கொன்று பாடையேற்றிவிட்டு ஊர்வலத்தில் மலர்தூவுவதுபோலிருக்கிறது இந்தப் படுபாதகச் செயல்!
இன்று தினந்தந்தியில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்தி இதுதான்: “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் . கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி... போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு”
போதாக்குறைக்கு, ‘இலங்கையைப் பணியவைத்த உண்ணாவிரதம்’என்ற தலைப்புடன் கலைஞர் களைத்துப்போய் படுத்திருப்பதான ‘பரிதாபகரமான’புகைப்படங்கள் ஒரு முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தன.
இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக இது அறிவிக்கப்படவேண்டும். இலங்கை அரசு - இந்திய மத்திய அரசு – தமிழக மாநில அரசு என்ற மூன்று அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் நன்றாகத்தானிருக்கிறது. ‘நான் அடிக்கிறது போல அடிக்கிறேன்.. நீ ங்கா ங்கா என்று சத்தமிட்டு அழு’என்று சொல்லிவைத்து எல்லாம் நடப்பதை அறிந்தவர் அறிவர். இந்திய அரசு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து இலங்கையில் போரை நடத்துகிறது. அதே இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லி ராஜபக்சேயைக் கேட்பதற்காக கொழும்புக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்புகிறது. ‘நான் ஒரு விசயம் தீர்மானிச்சுட்டா அப்புறம் என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்’என்று போக்கிரியில் விஜய் வசனம் பேசியது நினைவில் வந்து தொலைத்தது. தானே நடத்தும் போரை நிறுத்த, தானே கொழும்புக்குப் போகும் வேடிக்கை வேறெங்கும் நடப்பதற்குச் சாத்தியமில்லை. இதைத்தான் ‘கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருது ஏரோப்ளேன் ஓட்டுமாம்’என்று சொல்வார்கள். மக்களெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய அசடுகள், மகா மறதிக்காரர்கள் என்ற நம்பிக்கையில்லாமலா இதுவெல்லாம் நடக்கிறது?
தேர்தல் குறிகாட்டி அ.தி.மு.க.பக்கம் திரும்பவாரம்பித்துவிட்டது என்ற பயத்தின் விளைவே உண்ணாவிரதம் என்ற உச்சக்கட்டக் காட்சிக்குக் கலைஞரை உந்தித்தள்ளியது. கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.) மாநில அரசாங்கத்தின் முண்டுகொடுப்பு இல்லாமல் போனால் மத்திய அரசு கவலைக்கிடமாகிவிடும் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அவர்களைக் கிண்டினார். ‘அன்னை’சோனியாவும், மதிப்பிற்குரிய மன்மோகன்சிங்கும் ராஜபக்சேவைக் கூப்பிட்டு ‘நிறுத்துகிற மாதிரி நடி. தேர்தலுக்குப் பிறகு அடி’என்றார்கள். ‘அப்படியே ஆகட்டும். கனரக ஆயுதங்களால் அடிக்கவில்லை. சுட்டே கொன்றுவிடுகிறேன்’என்றிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, ‘கத்தியால் குத்தினால்தானே காயம் வரும்; நஞ்சுவைத்துக் கொல்கிறேன்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் இலங்கையின் அதிமேன்மை பொருந்திய ஜனாதிபதி அவர்கள். (துப்பினால் எச்சில் வீணாகிவிடும்)
நேற்று ‘கலைஞர்’செய்தியில் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது. பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கவிஞர் கனிமொழியும், தளபதி ஸ்டாலினும் கவலையோடு தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தி அம்மாளும் தயாளு அம்மாளும் அருகிலிருக்கிறார்கள். கலாநிதி, தயாநிதி மாறன்கள் ‘இந்த மட்டில் பிழைத்தீர்களே’என்று ஆற்றாமை பொங்க அருகில் நிற்கிறார்கள். இயக்குநர் பாலச்சந்தர், கவிஞர் வாலி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ‘எங்க குல சாமி நீங்க’என்று வழக்கம்போல வைரமுத்து வந்து நிற்கிறார். சுப.வீரபாண்டியன் (நீங்களுமா…?) ‘சாதித்துவிட்டீர்கள் ஐயா’என்பதான புன்னகையோடு ஓரத்தில் நிற்கிறார். ‘எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு கேனையன்களாகவா தெரிகிறது?’என்று கேட்கவேண்டிய மக்களில் ஒரு பகுதி கலைஞரைப் பார்க்க அலைமோதுகிறது.
ஆக, கலைஞரின் உண்ணாவிரதத்தினால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றொரு பிம்பத்தை மக்கள் மனதில் ஓரளவிற்கேனும் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருப்பவரின் அரைநாள் பட்டினிக்கே இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்துமளவிற்கு வலிமை இருக்கிறதென்றால் அதை ஏன் முன்னமே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தபின், இலட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் சிந்திச் சாபமிட்டதன் பின் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதன் அவசியந்தான் என்ன? அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. கொலைகளைத் தடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தும், கைகட்டி, கால்பிடித்துப் பார்த்திருப்பதும் கொலைசெய்தலுக்கு ஈடான குற்றந்தான்.அமெரிக்கா மறைமுகமாக அச்சுறுத்திவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இனவழிப்பைக் கண்டித்து தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவாரம்பித்திருக்கின்றன. மத்தியில் அரசு சரிந்துவிடும் என்பதோடு, இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் இந்தியாவின் இறைமை என்னாவது? என்ற கிலி இந்தியாவைச் சூழவாரம்பித்திருக்கிறது. ‘இந்த அடி அடிக்கிறான் என்னய்யா பாத்துக்கிட்டிருக்கே’என்று அமெரிக்கா புருவம் தூக்குவது இந்தியாவின் இந்துசமுத்திரப் பொலிஸ்காரன் சீருடைக்கு ஏற்புடையதன்று.
‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததாம்’, ‘குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை’போன்ற பழமொழிகளை இங்கே நினைவுகூர்தல் நன்று.
பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை ஈழத்தில் போரை நிறுத்தும்படியாகக் கேட்டு நடத்திவருகிறது. சூழ்ச்சிக்கு அஞ்சி கட்சிமாறிய வைக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்திற்கு ஆதரவாகவே பேசிவருகிறார். மத்தியும் மாநிலமும் ஆட்டம் காணும் என்றறிந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட மருத்துவர் ராமதாஸ் சுயநலத்துடன்கூடிய பொதுநலவாதியாக மாறியிருப்பதும் மகிழ்ச்சியே. ஓட்டுக்காக என்றாலும், ‘சாமியா பேசுவது’என்று யாவரும் வியந்து பார்க்கும்படியாக ஈழ ஆதரவுக் கருத்துக்களை நாளாந்தம் உதிர்த்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் குரலுக்கு இன்றைய சூழலில் மரியாதை இருக்கவே இருக்கிறது. தன்னுடலில் மூட்டிய தீயால் இலட்சக்கணக்கான தமிழகத்தாரின் இதயங்களில் விழிப்பு என்ற சுடரை ஏற்றிவைத்துப்போன முத்துக்குமார், அவன் வழியில் தம்முயிரை ஈகம் செய்த ஏனையோர், ‘எங்கள் இரத்தமய்யா… எங்கள் இரத்தம்…’ என்று ஊர்வலங்களையும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக சகோதரர்கள், உண்ணாவிரதம் இருக்க அரசு இடமளிக்காதபோது அலைந்து திரிந்து, ‘தாயகத்தில்’பதினொரு நாட்கள் பசித்துக் கிடந்த பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மனிதாபிமானமுள்ள பெண்கள், எப்போதும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் கவிஞர்கள் தாமரை, அறிவுமதி, சிறைசென்ற சீமான், அமீர், கொளத்தூர் மணி, சம்பத், விருதைத் திருப்பியளித்த பாரதிராஜா, திரைத்துறையினர், பிரான்ஸ், கனடா, இலண்டன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ‘எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள்’என்று அவ்வந் நாடுகளின் ஆட்சியலுவலகங்களின் முன் தொடர்போராட்டங்களை நடத்திவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி. மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது. இப்படியெல்லாம் நடக்கக்கூடுமெனில், எருது ஏரோப்ளேன் ஓட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை.
வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள்.
‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும்
. எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

No comments: