Friday, April 25, 2008

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...

-வே. மதிமாறன்





வரலாறை தன் விரும்பம் போல் கற்பனை செய்து சொல்லுகிற மோசடி அறிஞர்கள், தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் ஒரு குறிப்பிடதக்க அறிஞர்தான் இந்த ‘வாயாடி‘ நெல்லை கண்ணன்.

ஐந்தாம் வகுப்பு பையன் அஞ்சு மார்க்குகாக செய்யுளை மனப்பாடம் பண்ணி மளமளன்னு ஒப்புக்கிறானே, அந்த மாதிரி ‘திறமை‘ உள்ளவர்தான் இந்த ஆளு.

இந்த நல்லவரை விஜய் டீ.வி. ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்கிற பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக நியமிச்சிருக்கு.

தமிழ் தொலைக்காட்சிகளில் வருகிற நடன போட்டி, பேச்சுப் போட்டி, பட்டி மன்றம் போன்றவற்றில் ‘ஜட்ஜாக‘ வருகிற இந்தக் கோமாளிகள், தங்களை சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி நினைச்சுக்கிட்டு, சவடால் விடறதும், கண்டிக்கிறதும், தனக்கு முன்பு பங்கேற்பாளர்கள் பணிவாக நடந்துக்கணும், எதிர்த்து பேசக்கூடாதுன்னு ‘பில்டப்‘ பண்ணுவதுமாக இருக்கிறார்கள்.

அப்படி ஒரு ‘பில்டப் கட்டப்பஞ்சாயத்து‘ பாணி நடுவராதான் இந்த நெல்லை கண்ணன், 9-3-2008 அன்று காலை 9 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான, ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு‘ என்ற நிகழ்ச்சியிலே நடந்துகிட்டாரு.

சரி, வெறும் பில்டப்போடு போயிருந்தா பரவாயில்லை, போய் தொலையட்டும்னு விட்டுருக்கலாம். ஆனால் வரலாறை கற்பனையாவும், பாரதி கவிதையை திரிச்சி தன் இஷ்டம்போல் பயன்படுத்தி பங்கேற்ற ஒரு பகுத்தறிவாளரான ஒரு இளைஞரை அவமானப்படுத்தியதை பார்த்த பிறகும் நாம் எப்படி அமைதியாக இருக்க முடியும்?

பிரசன்னா என்ற ஒரு இளைஞர், ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டி, “பாரதி வேண்டுமானால் கடவுளை நம்பி பாட்டுப் பாடலாம், ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை“ என்ற அர்த்தப்படும்படி தன் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

உடனே நம்ம ‘மெம்மரி பிளஸ்‘ நெல்லை கண்ணன்,“பிரசன்னா, பாரதி அந்தக் கவிதையை அப்படி பாடவில்லை. மாகாளி பராசக்தி உருசியநாட்டினிற் கடைகண் வைத்தா ளங்கே ஆகவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி, என்று பாடினான். அதில் பாரதி நமக்கு சொல்லுகிற செய்தி என்னவென்றால், இங்கே இருக்கிற பராசக்தி ருஷ்ய நாட்டிற்கு ஏன் கடைகண் திறந்தால் என்றால், முயற்சியோடு வழிபட வேண்டும். ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்றார்.

அதற்கு பிரசன்னா, “பாரதி ருஷ்ய புரட்சியை பற்றி பாடிக் கொள்ளட்டும் நான் அதை பற்றி சொல்லவில்லை” என்று பேச முயற்சித்தார்.

உடனே, ‘எண் கவனகம்‘ நெல்லை கண்ணனோ, “பிரசன்னா, நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று குதித்தார்.

அருகில் இருந்த அறிவுமதி, “எதிர்த்து பேசக்கூடாது” என்று பிரசன்னாவை எச்சரித்தார்.அந்த இளைஞர் பேச அனுமதியில்லாமல் திருப்பி அனுப்ப்பட்டார்.



இதில் நெல்லை கண்ணன் செய்த மோசடிகளைப் பார்ப்போம்.

மோசடி 1: பிரசன்னா என்கிற அந்த இளைஞர் மேற்கோள் காட்டிய ‘வல்லமை தாராயோ,- இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே?’ என்ற கவிதை, பக்திப் பாடல்கள் வரிசையில் 49 வது பாடலாக ‘கேட்பன‘ என்ற தலைப்பில் பாரதி எழுதிய ‘நல்லதோர் வீணை செய்தே-அதை நலம் கெடப் புழுதியி லெறிவ துண்டோ? சொல்லடி சிவசக்தி!’ என்ற பாடலில் வருகிறது.

ஆனால் நெல்லை கண்ணன் குறிப்பிடுகிற பாடல், தேசபக்திப் பாடல்கள் வரிசையில் 52 வது பாடலாக ‘புதிய ருஷியர்-ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி‘ என்ற தலைப்பில் வருகிறது.

பிரசன்னா சொன்னது சிவசக்தி. நெல்லை கண்ணன் போட்ட முடிச்சோ பராசக்தி.‘

`என்னை முட்டாள் என்று நினைத்தீர்களா?’ என்று பிரசன்னாவிடம் ஆவேசப்பட்ட கண்ணன், ஒரு முட்டாளாகத்தான் நடந்திருக்கிறார்.

மோசடி 2: அப்படி முட்டாள் தனமாக மாற்றி மேற்கோள் காட்டிய பாடலையும், திரித்து “ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டு உன் முட்டாள் தனத்தால் வழிபட்டால் பராசக்தி உனக்கு நன்மை செய்யமாட்டாள்…” என்கிறார் இந்த சைவப்பிள்ளை கண்ணன்.

இதுதான் பிள்ளைமார்களும் பார்ப்பனர்களும் சங்கமிக்கிற இடம். அந்த இடத்தில்தான் பாரதியோடு சங்கமிக்கிறார் நெல்லை கண்ணன். சிறு தெய்வ வழிபாட்டு முறையை பார்ப்பன மற்றும் உயர் ஜாதி மயமாக்குதல்.

மோசடி 3: “நான் இருக்கும் இடத்தில் பாரதியை அவமானப்படுத்தி பேசுவதை அனுமதிக்க முடியாது. நான் முட்டாள் அல்ல.” என்று ஒரு அப்பாவி இளைஞனிடம் வீராப்பு காட்டுகிற கண்ணன், பாரதியை அம்பலப்படுத்தி நான் எழுதிய ‘பாரதி‘ ய ஜனதா பாரட்டி‘ என்ற புத்தகத்திற்கு பதில் சொல்ல வக்கற்று, காற்றில் கத்தி சுற்றுகிறார்.

மோசடி 4: “விரைவாக அழிந்து வருகிற மொழிகளில் தமிழும் ஒன்று. என்று கேள்விபட்டவுன் நான் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை“ என்று தமிழக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால், தன்னால் தாங்க முடியாது என்பது போன்ற ‘பெர்பாமன்ஸ்‘ தருகிறார் கண்ணன்.

உங்க சைவ சமயத்தின் உயிர் மூச்சான தேவாரம், திருவாசக்ததை சிதம்பரம் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி 2-3-2008 க்கு முன்னால போய் பாடியிருக்க வேண்டியதுதானே? பாடியிருந்தா, தீட்சிதனுங்க வாயிலேயே குத்தியிருப்பானுங்க.
www.mathimaran.wordpress.com

No comments: